உலகம்

அமெரிக்கா: 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பமான பெண் கைது

அமெரிக்கா: 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பமான பெண் கைது

Sinekadhara

அமெரிக்காவில் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பமடைந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் பாராகௌல்டு பகுதியில் வசித்துவரும் பிரிட்டனி க்ரே (23 வயது) என்ற பெண் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறார்.

18 வயதுக்கு உட்பட்ட சிறுவனுடன் க்ரே பாலியல் உறவு வைத்திருப்பதை பார்த்த ஒருவர், செப்டம்பர் 29, 2020 அன்று பாராகௌல்டு காவல் நிலையத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து தகவல் அளித்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்பே 2020, பிப்ரவரி மாதத்தில் வேறொருவர் இதுகுறித்து அர்கான்சஸ் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பிரிவு ஹாட்லைனுக்கு அழைத்து புகார் கூறியிருக்கிறார். மேலும், க்ரேவின் வீட்டிலேயே அந்தச் சிறுவன் வசித்துவருவதாகவும் கூறியிருக்கிறார். அவரே மீண்டும் அழைத்து சிறுவனை அவன் வீட்டில் க்ரே கொண்டுசென்று விட்டதாகவும் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த நிலையில், 14 வயது சிறுவனுடன் க்ரே பாலியல் உறவு வைத்திருந்தது மட்டுமல்லாமல், தற்போது கர்ப்பமாக இருந்ததும் கண்டறியப்பட்டது.

மார்ச் 1ஆம் தேதி க்ரேவை கைதுசெய்த போலீஸார், அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்ந்தனர். ஆனால், வியாழக்கிழமை 5 ஆயிரம் டாலர் அபரதம் செலுத்திய பிறகு அவரை விடுதலை செய்துள்ளனர். வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.  சிறுவனுடன் க்ரே எவ்வளவு நாட்கள் தொடர்பில் இருந்தார், தொடர்பு எப்படி ஏற்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.