யாஹ்யா சின்வார் முகநூல்
உலகம்

இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார்... யார் இவர்?

சிறையில் கல்வி, தீர்க்கமான முடிவு, வசீகர தலைமைத்துவம் என இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இவரை பற்றி விரிவாக இங்கே அறியலாம்...

PT WEB

செய்தியாளர்: பால வெற்றிவேல்

சிறையில் கல்வி, தீர்க்கமான முடிவு, வசீகர தலைமைத்துவம் என இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதை இஸ்ரேல் மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடுகின்றனர். ஸ்டெரோட் நகரின் வீதிகளில், இஸ்ரேலின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு கூடிய மக்கள், இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, இசைக்கு ஏற்ப கூட்டம் கூட்டமாக சேர்ந்து உற்சாகமாக நடனமாடியதையும் காண முடிந்தது.

யாஹ்யா சின்வார்

காரணம் என்ன.. யார் இந்த சின்வார்..? இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்தான் சின்வார். 1980-களில் இஸ்ரேலிய ஆதரவாளர்களைக் கொன்று குவித்ததால் "கான் யூனிஸ் கசாப்புக்காரர்" (Butcher of Khan Yunis) என்று அப்பகுதி மக்களால் சின்வார் அறியப்பட்டார் . இதே குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கேயே கல்வி பயின்றார்.

2007-ல் ஹமாஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கிய அவர், அமைப்பின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும், இஸ்ரேல் ராணுவத்தின் வியூகங்கள், ஆயுதங்கள் குறித்து அறிவதிலும் ஆர்வம் காட்டினார்.

2015ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. 2017ல் ஹமாஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, இயக்கத்தின் வியூகங்களில் மாற்றம் ஏற்பட்டது. இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை தொடுப்பது இவரது தலைமையின் கீழ்தான் தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பினரை நவீன ராணுவ உபகரணங்களை உபயோகப்படுத்துவதிலும் திறன் மிக்கவர்களாக மாற்றினார் சின்வார். கடந்த ஜூலை மாதத்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே மரணத்திற்குப் பிறகு, அமைப்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சின்வார்தான் கவனித்து வந்தார்.

இஸ்மாயில் ஹனியே, நஸ்ரல்லா,

வசீகர பேச்சாளர், திறன்மிக்க தலைவர், எதிரிகளின் வலிமையை நன்கு அறிந்த ராஜதந்திரி என பன்முகம் கொண்ட சின்வாரின் மரணம், மத்திய கிழக்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நஸ்ரல்லா, இஸ்மாயில் ஹனியே ஆகியோரது மரணத்தைத் தொடர்ந்து இவரது கொலை, ஈரான் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு அமைப்பினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தும் என்றும், காசாவில் புதிய மோதலை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.