Anura Kumara Dissanayake X Page
உலகம்

இலங்கை அரசியலில் வீசும் புயல்... இளைஞர்களின் எழுச்சி நாயகன்... யார் இந்த AKD..?

இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இலங்கை அரசியல் களத்தில் மூன்றெழுத்து மந்திரமாக ஒலிக்கிறார் AKD என்று அனைவராலும் அழைக்கப்படும் Anura Kumara Dissanayake.

யுவபுருஷ்

தமிழக அரசியலில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், ’தலைவன் யுகம் பொறக்குது.. மூணெழுத்து மந்திர மீண்டும் காலம் ஒலிக்குது’ என்று தனது கொடி பாடலில் குறிப்பிட்டிருந்தார். அப்படித்தான், இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இலங்கை அரசியல் களத்தில் மூன்றெழுத்து மந்திரமாக ஒலிக்கிறார் AKD என்று அனைவராலும் அழைக்கப்படும் Anura Kumara Dissanayake.

தமிழக அரசியல் களத்தில் இளைஞர்களின் வாக்கு, நம்பிக்கையை பெற்றவர் சீமான் என்றால், இலங்கை ஜனாதிபதி தேர்தலில், இளைஞர்களின் நாயகனாக மாறியிருக்கிறார் AKD.

யார் இவர்.. இலங்கை அரசியலில் இவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

நமது அண்டை நாடான இலங்கையில் இன்றைய தினம் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளர் Anura Kumara Dissanayake உட்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். விரைவில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திசையெங்கும் AKD என்ற மூன்றெழுத்துதான் பேசுபொருளாக இருக்கிறது.

இப்படி மக்களின் ஆதரவை பெற்றுள்ள Anura Kumara Dissanayake, உண்மையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமமான Thambuttegama வில் 1968ம் ஆண்டு பிறந்தவர்தான் Anura Kumara Dissanayake. தினக்கூலி வேலைக்கு சென்றாலும், மகனை படித்து பெரிய ஆள் ஆக்க நினைத்த இவரது பெற்றோர், அதுப்படியே மேற்படிப்பையும் படிக்க வைத்துள்ளனர். அப்படி, Kelaniya பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர், தனது இளம் வயதிலேயே அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.

இதன் காரணமாக தீவிர அரசியலில் இறங்கி வேலை செய்ய நினைத்தவர், 1987ல் JVP கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து, 1995ம் ஆண்டு சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனவர், கட்சியின் மத்திய செயற்குழுவிலும் உறுப்பினரானார். தொடர்ந்து ஏறுமுகமாக மூன்று ஆண்டுகளில் JVP-ன் அரசியல் குழுவிலும் உறுப்பினரானார் AKD. 2000 ஆம் ஆண்டில் மக்களவை உறுப்பினராக வென்றவர் இன்று வரை தோல்வியை காணாத தலைவராகவும் திகழ்ந்து வருகிறார். அடுத்த 14 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை அடுத்து 2014ம் ஆண்டு JVP-ன் தலைவராக மாறினார் AKD.

ஊழல் எதிர்ப்பு.. நேர்மையான அரசாங்கம் என்ற தனது கொள்கையால் முன்னேறிய வகுப்பைச் சார்ந்த மக்களைக் கடந்து, எளிய மக்களின் நம்பிக்கை நாயகனாக மாறியிருக்கிறார் AKD. எப்போதும் இல்லாமல், கடந்த 2019ம் ஆண்டு அதிபர் வேட்பாளராக நின்ற AKD பெற்ற வாக்குகள் வெறும் 3.1 சதவீதம்தான். ஆனால், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் வெடித்த புரட்சிக்கு AKD துவக்கப்புள்ளியாக இருந்த நிலையில், அதன் பிறகு அவருக்கான ஆதரவு அலை பெருகியுள்ளது. அப்போது, 3.1 சதவீதமே பெற்றவர் இந்த தேர்தலில் 10 மடங்கு கூடுதல் வாக்குகளை வாங்கும் அளவுக்கு அரசியலில் பெரும் சக்தியாக மாறியிருக்கிறார்.

நீண்ட காலமாக இந்த அரசாங்கங்களை சகித்துக்கொண்டு இருந்த மக்கள், ஆட்சியாளர்களின் தொடர் தோல்விகளால் சோர்வடைந்துள்ளனர். ஒரு பெரும் மாற்றத்திற்கான ஆசைதான் அவர்களை நம்மிடம் இழுக்கிறது என்று தேர்தல் பரப்புரையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் AKD.

சிங்களவர்கள், தமிழர்கள் என்று இலங்கையில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களாலும், குறிப்பாக இளைஞர்களின் எழுச்சி நாயகனாக மாறியிருக்கும் AKD, இந்த தேர்தலில் வென்று இலங்கை அரசியலில் புது மாற்றமாக இருப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.