சாண்ட்ரா ஹெம்மி எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | செய்யாத குற்றத்துக்காக 43 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பெண்.. உண்மை வெளிவந்தது எப்படி?

Prakash J

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் செயின்ட் ஜோசப் பகுதியைச் சேர்ந்தவர் பாட்ரிசியா ஜெஷ்கே. இவர் நூலகப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அவர் கடந்த 1980ஆம் ஆண்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்போது சாண்ட்ரா ஹெம்மி என்ற 20 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார். இதில், அதிர்ச்சி என்னவென்றால், இந்தக் கொலைக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுதான். ஆனாலும், இந்த வழக்கின் விசாரணையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

செய்யாத கொலைக்காக அவர், 43 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இதன்மூலம், அமெரிக்க வரலாற்றில் செய்யாத குற்றத்துக்காக நீண்டகாலம் தண்டனை அனுபவித்த ஒரே பெண் இவராகத்தான் இருப்பார் என்கின்றனர், வழக்கறிஞர்கள்.

தற்போது, அவருக்கு 64 வயதான நிலையில், தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். என்றாலும், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த வழக்கில் இருந்து அவரது பெயரை முழுமையாக நீக்க தொடர்ந்து போராடுவோம் என இன்னசென்ஸ் ப்ராஜெக்ட் (Innocence Project) அமைப்பில் உள்ள சட்டக் குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம்தான் இணையத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளது.

இதையும் படிக்க: மத்திய பட்ஜெட் 2024| வருமான வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன.. முழு விவரம்!

இந்த கொலை குற்றத்தில் அவரைத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் இல்லை என அவரது வழக்கில் மறு ஆய்வு செய்யப்பட்டது. அதாவது, சிறுவயதிலிருந்தே ஹெம்மிக்கு மனநலக் கோளாறு இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இந்தச் சூழலில்தான் கொலை சம்பவம் நடைபெற்ற சமயத்தில், அவர் ஒரு மனநல மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆன்டிசைகோடிக் மற்றும் சக்தி வாய்ந்த மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த மருந்துகளின் வீரியத்தால் மயக்க நிலையில் இருந்த ஹெம்மியிடம்தான் போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின்போது, என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர், தடுமாறியப்படியே பதிலளித்துள்ளார். மருந்துகளின் பக்கவிளைவால் தசைப்பிடிப்பு வலியும் இருந்ததால், அவரால் போலீஸாரிடம் நிமிர்ந்துகூட உட்கார்ந்து பதில் சொல்ல முடியவில்லை.

இதையும் படிக்க: அமெரிக்கா| ஒரேநாளில் ரூ.677 கோடி நிதி திரட்டிய கமலா ஹாரீஸ்.. அடுத்த அதிபர் பெண்தான்.. கணித்த ஜோதிடர்

இந்த ஆதாரத்தை மட்டுமே வைத்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அதன்படியே, அவருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. தற்போது இது ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் அவருக்கு நீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது. தீர்ப்பில், ’அவருக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவர் இந்தக் கொலையைச் செய்ததற்கான எந்தச் சாட்சிகளும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 19ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஹெம்மி, தன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அங்கு அவர் தனது சகோதரி, மகள் மற்றும் பேத்தியைக் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார்.

அதேநேரத்தில், இந்தக் கொலை வழக்கில் போலீஸ் ஒருவருக்கு நேரடி தொடர்பிருந்ததாகவும், அதை அப்போதைய அதிகாரிகள் நிராகரித்ததாகவும் சமீபத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த அதிகாரி, தன்னுடன் பணியாற்றிய மைக்கேல் ஹோல்மன் என்பவருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பது தெரிய வந்தும் அதைப் புறக்கணித்துள்ளார். என்றாலும் ஹோல்மன் தற்போது உயிருடன் இல்லை. ஹோல்மன் பற்றிய இந்த தகவல்கள் எதுவும் அந்த நேரத்தில் ஹெம்மியின் வழக்கறிஞர் குழுவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிக்க: குஜராத்| 88 வீடுகள்.. 700 மக்கள்.. போலி ஆவணம் மூலம் ஒரு கிராமத்தையே விற்ற 6 பேர்.. நடந்தது என்ன?