உலகம்

“எங்கள் மீதான தடை அமெரிக்காவின் பொருளாதாரப் பயங்கரவாதம்” - ஈரான் அதிபர்

rajakannan

ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் செயல், பொருளாதாரப் பயங்கரவாதம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விதிகளை மீறி ஈரான் தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அண்மையில் ஈரானுடான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். அத்துடன் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்கும் நோக்கில், அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக எச்சரித்திருந்தார். 

எனவே, நவம்பர் 4 ஆம் தேதிக்குள் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை உலக நாடுகள் முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டார். இதற்கு முன் தளர்த்தப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது மீண்டும் விதிப்பதாக ட்ரம்ப் தெரிவித்தார். அதே நேரம் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஈரானுடனான ஒப்பந்தத்தை தொடரப் போவதாகவும் அந்நாடுகள் அறிவித்தன.  

இந்நிலையில், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள அமெரிக்காவின் செயல், பொருளாதாரப் பயங்கரவாதம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் பேசிய அவர், அமெரிக்காவின் நியாயமற்ற, சட்டவிரோத பொருளாதாரத் தடைகள் ஈரானைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள பொருளாதாரப் பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். ஈரானின் சுதந்திரம் மற்றும் அடையாளத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாக இந்தப் பொருளாதாரத் தடைகளைக் கருதுவதாகவும் ஹசன் தெரிவித்தார்.