கமலா ஹாரீஸ் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா| ஒரேநாளில் ரூ.677 கோடி நிதி திரட்டிய கமலா ஹாரீஸ்.. அடுத்த அதிபர் பெண்தான்.. கணித்த ஜோதிடர்

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிறுத்தப்பட்டிருந்தார். வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்ட செயல்களால் ஜோ பைடன் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் அவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அதிபர் பராக் ஒபாமாகூட, ஆட்சபனை தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை, ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அறிவித்தார். இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப் - ஜோ பைடன்

இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸ், தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பல ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 81 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 677 கோடி என்றே கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் முதல்முறையாக இந்தத் தேர்தலுக்காக நிதி அளித்துள்ளனர்.

இதையும் படிக்க: பும்ராவுக்கு ஆதரவு! ரோகித், கோலிக்கு ஆப்பு.. Teamஐ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கவுதம் கம்பீர்

மேலும், ஜனாதிபதி தேர்தலில் களம்காணும் எந்தவொரு வேட்பாளரும் 24 மணி நேரத்தில் இந்த அளவுக்கு பெருந்தொகையை திரட்டியதில்லை என்றே தரவுகளின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். மொத்தமாக மூன்று அமைப்புகள் கமலா ஹாரிஸ் சார்பில் நிதி திரட்டியுள்ளது. 8,80,000 நன்கொடையாளர்களுக்கும் அதிகமானோர் நிதி அளித்துள்ளனர். இதில் 60 சதவிகிதத்தினர் 2024 தேர்தலில் முதல்முறையாக நிதி அளிப்பவர்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கமலா ஹாரீஸின் வெற்றி உறுதியாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஜனநாயகக் கட்சியால் அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்றாலும், கமலா டொனால்டு ட்ரம்ப்க்கு கடுமையான போட்டியாளராக இருப்பார் என்பதால் அவரையே வேட்பாளராக அறிவிக்கும் முடிவில் கட்சியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கமலா ஹாரிஸ் மீது குவியும் ஆதரவால் டொனால்டு ட்ரம்ப் தரப்பு அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ட்ரம்பா, கமலா ஹாரிஸா என்ற கேள்விக்கு 47 சதவீத வாக்காளர்கள் ட்ரம்புக்கு ஆதரவாகவும். 45 சதவீத வாக்காளர்கள் கமலா ஹாரிஸ் அதிபர் ஆகலாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது. அவர் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: மத்திய பட்ஜெட் 2024| வருமான வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன.. முழு விவரம்!

இதற்கிடையே அமெரிக்காவின் புதிய அதிபராக பெண் ஒருவர் பொறுப்பேற்பார் என்றும் அது, கமலா ஹாரிஸ் அல்ல என்றும் அஸ்பாரகஸ் ஜோதிடர் என அறியப்படும் Jemima Packington கணித்துள்ளார்.

அவர், ”அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தமக்கு அதிகம் என நம்பும் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக மிச்செல் ஒபாமா வெற்றிபெறுவார். நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் அல்லது கமலா ஹாரிஸ் என இருவருக்கும் வாய்ப்பில்லை.

யாரும் எதிர்பாராத நேரத்தில் மிச்செல் ஒபாமா களத்திற்கு வருவார். டொனால்டு ட்ரம்பிடம் இருந்து வெற்றி வாய்ப்பை அவர் தட்டிச் செல்வார். ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாட்டில், அதிரடி திருப்பமாக மிச்செல் ஒபாமா அதிபர் வேட்பாளராக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். இதனால், டொனால்டு ட்ரம்பின் ஜனாதிபதி கனவு அத்துடன் முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் எதிர்காலத்தை கணிப்பதில் புகழ் பெற்றவரான Jemima Packington இங்கிலாந்து ராணியின் மரணத்திற்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவர் என முன்பே கணித்துச் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மத்தியப் பிரதேசம் | வரதட்சணைக் கொடுமையில் கர்ப்பிணி படுகொலை.. உடலை தீவைத்து எரித்த கொடூரம்!