ஜாரெட் ஐசக்மேன் ஸ்பேஸ் எக்ஸ்
உலகம்

வரலாற்றில் முதல்முறை.. விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்ட அமெரிக்க கோடீஸ்வரர்!

Prakash J

ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் வணிகரீதியாக தொழில்முறை விண்வெளி வீரர் அல்லாத தனிநபர்களை விண்வெளி நடைபயணம் மேற்கொள்ள வைப்பதற்கான முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரான ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களான சாரா கில்லிஸ், அன்னா மேனன், அமெரிக்க விமானப் படையின் முன்னாள் விமானியான ஸ்காட் போட்டீட் ஆகிய 4 பேரும் ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் கடந்த செப். 10ஆம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டனர்.

அந்த விண்கலம் செப்.11ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து முதல் ஆளாக கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் விண்வெளி நடைபயணத்தை மேற்கொண்டார்.

15 நிமிடம் அவர் விண்வெளியில் நடைபயணம் செய்தார். அதன்பின்னர் அவர் விண்கலத்துக்குத் திரும்பினார். அடுத்து, சாரா கில்லிஸ் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டார்.

இதையும் படிக்க: AFG Vs NZ| 26 ஆண்டுகளில் முதல்முறை.. ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்ட டெஸ்ட்.. என்ன காரணம்?

அன்னா மேனன் மற்றும் ஸ்காட் போட்டீட் ஆகிய இருவரும் விண்கலத்துக்குள் இருந்த நடைபயணத்தை ஆய்வு செய்தனர். இந்த முயற்சி ஆபத்தானதாக கருதப்பட்டாலும், இரண்டு மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

ஆய்வுப் பணிகளுக்காக, இதுவரை 12 நாடுகளைச் சேர்ந்த 263 விண்வெளி வீரர்கள் விண்வெளி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவை அனைத்துமே ஆய்வு நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது வணிகரீதியில் ஜாரெட் ஐசக்மேன் மேற்கொண்ட நடைபயணம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்காக அவர் எவ்வளவு தொகையைக் கட்டணமாகச் செலுத்தினார் என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார்.

இதையும் படிக்க: “எங்கள் வங்கிக் கணக்குகளை சுவிஸ் முடக்கியதா? இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு” - அதானி குழுமம் விளக்கம்!