இரட்டை கோபுர தாக்குதல் pt desk
உலகம்

உலகை உலுக்கிய இரட்டை கோபுர தாக்குதல்: செப்டம்பர் 11 ‘அமெரிக்காவின் கறுப்பு தினம்’ என்பது ஏன்?

webteam

தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் நியூயார்க் நகரத்தில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 08:46 மணிக்கு அரங்கேறியது இந்த பயங்கர தாக்குதல். 19 அல்கய்தா தீவிரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம், ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் பென்சில்வேனியா பகுதி ஆகிய மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தினர்.

இரட்டை கோபுர தாக்குதல்

வாஷிங்டனில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகள், நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர். தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட மற்றொரு விமானம் காலை 9:03க்கு இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலையடுத்து வானுயர் கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல சரியத் தொடங்கின. அங்கு பணியாற்றியவர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்த சில நிமிடங்களில், அதாவது சரியாக 9.37 மணிக்கு, உலகின் அதிக வலிமை வாய்ந்த அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது நடைபெற்றது அடுத்த தாக்குதல்.

மற்றொரு விமானம் பென்சில்வேனியாவில் உள்ள விளைநிலத்தில் விழுந்து வெடித்தது.

இரட்டை கோபுர தாக்குதல்

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 2,977 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாகவும் இது பதிவானது. இதனைத் தொடர்ந்து, பயங்கவாதத்திற்கு எதிரான போரை அறிவித்த அமெரிக்கா, அல்கய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கடந்த 2011ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது.

உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்த இரட்டைக் கோபுர தாக்குதலில் உயிரிழந்தோரின் நினைவைப் போற்றும் வகையில், செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் தேசப் பற்றாளர்கள் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.