உலகம்

“இந்தியா விதித்துள்ள வரி ஏற்கும்படி இல்லை” - ட்ரம்ப் எச்சரிக்கை 

webteam

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரி ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு அளித்து வந்த வரி விலக்கிற்கான ‘Generalised System of preferences’ என்ற அந்தஸ்த்தை ரத்து செய்தது. இதனையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கு இந்தியாவும் அமெரிக்காவின் 28 பொருட்களுக்கான சுங்கவரியை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. அத்துடன் இந்தியாவின் இரும்பு மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. 

இந்நிலையில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்துள்ள வரி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, “இந்திய அரசு அமெரிக்கா பொருட்கள் மீது வரி விதித்தது ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இல்லை” எனக் கூறியுள்ளார். இந்தியா விதித்துள்ள வரி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். 

முன்னதாக கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரியை அதிகரித்துள்ளது குறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேச உள்ளேன். இந்தப் பொருட்களின் மீது போடப்பட்டுள்ள வரி ஏற்றுக்கொள்ள தக்க வகையில் இல்லை. எனவே அவை விரைவில் விலக்கி கொள்ளவேண்டும்” எனப் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.