உலகம்

`கொறடா நியமனத்தில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தா' -போரிஸ் ஜான்சன் பதவி விலகலுக்கு இதானா?

நிவேதா ஜெகராஜா

பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியுள்ளார். இந்த பதவி விலகலின் பின்னணி நாம் அறியவேண்டிய வரலாறென்றே சொல்லலாம். ஏனென்பதற்கான விடையே, இந்த கட்டுரை உங்களுக்கு சொல்லும்! 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்த பிரிட்டன் பெற்றோர்களுக்கு பிறந்தவர் அலெக்சாண்டர் போரிஸ் ஜான்சன். ஆரம்பத்தில் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய போரிஸ் ஜான்சன், தி டைம்ஸ், டெலிகிராஃப், தி ஸ்பெக்டேடர் உள்ளிட்ட பத்திரிகைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். இதன் பின் 2001ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சனின் அரசியல் பாதைக்கு தடம் மாறினார். 2001 முதல் 2008 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போரிஸ் ஜான்சன் சிறிது இடைவெளிக்கு பின் 2015ஆம் ஆண்டிலிருந்து அப்பதவியில் தொடர்கிறார்.

இக்கால கட்டத்தில் லண்டன் மேயராகவும் 8 ஆண்டு காலம் பதவி வகித்தார் போரிஸ் ஜான்சன். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக தீவிர பரப்புரையையும் அவர் முன்னெடுத்தார். இதன் பலனாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜான்சன் 2019ஆம் ஆண்டு பிரிட்டன் பிரதமராக உயர்ந்தார். ஆனால் இவரது பதவிக்காலம் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிரிட்டன் பிரதமர் ஒருவர் இதுபோன்ற அவமதிப்புக்கு ஆளானது அதுவே முதல்முறை.

இதன் பின் அடுத்தடுத்து அரசியல் சுழல்களில் சிக்கிய இவர் கடந்த ஜூன் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தப்பிப் பிழைத்தார். இந்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய கிறிஸ் பிஞ்ச்சர் என்பவரை துணை தலைமை கொறடாவாக நியமித்ததால் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்களும் அதிகாரிகள் கொதித்தெழுந்தனர்.

ரிஷி சுனாக், சஜித் ஜாவித் என அமைச்சர்கள் வரிசையாக விலகிய நிலையில் மூத்த அதிகாரிகள் ராஜினாமா செய்தனர். இதனால் போரிஸ் ஜான்சன் பதவி விலக பல்வேறு தரப்புகளில் இருந்து நெருக்கடி அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து வேறு வழியின்றி பிரதமர் நாற்காலியிலிருந்து இறங்கியுள்ளார் போரிஸ் ஜான்சன்.