model image freepik
உலகம்

உடலுறவுக்கு கட்டணம் வசூலித்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவர்.. நிராகரித்த உயர்நீதிமன்றம்!

Prakash J

தைவான் நாட்டைச் சேர்ந்தவர் ஹாவோ. இவருடைய மனைவி ஜுவான். இவர்களுக்கு, கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு ஹாவோவின் திருமண வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியிருக்கிறது.

காரணம், அதன்பின் ‘மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே பாலியல் உறவுக்கு அனுமதி’ என அவரின் மனைவி நிபந்தனை விதித்துள்ளாராம். அதன்பிறகும் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. ‘2019ஆம் ஆண்டிலிருந்து என்னை அனைத்து விஷயங்களிலிருந்தும் ஒதுக்கிவைத்தார் என் மனைவி. ஆனால் அதற்கு எந்தக் காரணங்களையும் அவர் கூறவில்லை’ என்றுள்ளார் ஹாவோ. இதனால் இருவருடைய திருமண பந்தத்தில் விரிசல் ஏற்பட்டதாக ஹாவோ குறிப்பிடுகிறார்.

model image

இத்துடன் முடியவில்லை பிரச்னை... “2021-இல் என்னிடம் பேச வேண்டும் என்றாலோ அல்லது பாலியல் உறவுகொள்ள விரும்பினாலோ அதற்கு பணம் தர வேண்டும் எனக் கூறினார். என்னிடம் கட்டணமும் வசூலித்தார். மேலும் என்னைப் பற்றி தன் உறவினர்களிடம் தவறாகப் பேசினார்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் 2021-ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறார் ஹாவோ.

இந்நிலையில் மனைவி ஜுவான், ‘இனி உறவு மேம்படும் வகையில் நடந்துகொள்வேன்’ என கணவர் ஹாவோவிடம் உறுதியளித்து இருக்கிறார். இதனால், கணவர் வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறார். ஆனால் அதன்பின் மனைவியின் போக்கு முற்றிலும் மாறியுள்ளது. குறிப்பாக, கணவரின் சொத்தை தன் பெயரில் மாற்றியுள்ளார் என சொல்லப்படுகிறது.

அத்துடன், தன் கணவர் ஒவ்வொரு முறையும் பாலியல் உறவு வைத்துக்கொள்ளவும், பேசவும் 15 டாலர் (ரூ.1,260) வசூலித்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹாவோ மீண்டும் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் (2 ஆண்டுகள்) அவர்கள் இருவரும் நேரிடையாகப் பேசிக்கொள்ளவில்லை என தெரிகிறது. இருவரும் மெசேஜ் வழியே தகவல் தொடர்பை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இதற்கிடையே, இந்த தம்பதி கவுன்சிலிங்கிற்கும் சென்றுள்ளனர். ஆனால் அதிலும் பலனில்லை.

இதையும் படிக்க: ஒலிம்பிக் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்தாரா அன்டிம் பங்காலின் சகோதரி? உண்மையில் நடந்தது என்ன?

இந்த நிலையில்தான் தைவானில் உள்ள நீதிமன்றம் ஹாவோவுக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. ‘இந்த உறவுமுறை தீர்க்க முடியாத சிக்கல் நிறைந்திருக்கிறது’ என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும், மனைவி ஜுவானுக்கு இந்த விவாகரத்தில் விருப்பம் இல்லை. இதையடுத்து, அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

model image

இதுபோன்ற சம்பவம், அந்நாட்டில் புதிதல்ல எனக் கூறும் அந்நாட்டு ஊடகங்கள் பழைய சம்பவங்களையும் எடுத்துக் காட்டியுள்ளது. அந்த வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டில், மனைவி ஒருவர் கணவரிடம் பாலியல் உறவு வேண்டுமென்றால் 60 டாலர் (ரூ.5,040) பணம் தர வேண்டுமென கேட்டிருக்கிறார். உரையாடுவதற்கும், உணவு தரவேண்டும் என்றாலும் அதற்கும் கட்டணம் நிர்ணயித்து இருக்கிறார்.

அவர், குடும்பத்திற்கு எந்தச் செலவும் செய்யாததாலேயே அவருடைய மனைவி பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதுபோல், அந்த தம்பதியின் குழந்தைகளும், தங்களிடம் பேச விரும்பினால் பணம் கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். இறுதியில், காவலர்கள் தலையிட்டதில், குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 600 டாலர் (ரூ.50,402) தருவதற்கு அந்த கணவர் சம்மதித்து இருக்கிறார். அதனுடன் அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.

இதையும் படிக்க: “அவர் மீதும் தவறு இருக்கிறது”- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து சாய்னா நேவால்