ஹிந்துஜா குடும்பம் எக்ஸ் தளம்
உலகம்

வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்திய வழக்கு: ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறைத்தண்டனை

Prakash J

பிரிட்டனில் மிகவும் கோடீஸ்வர பின்னணியைக் கொண்டது ஹிந்துஜா குடும்பம். இந்த குடும்பத்தில் பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகிய நான்கு பேர் உள்ளனர். இந்த குடும்பத்தினர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வில்லாவில், வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்தியதாகவும் தவறாக நடத்தியதாகவும் மனிதக் கடத்தல் வழக்கு நடைபெற்று வருகிறது.

குறைந்த ஊதியம், அதிக பணி நேரம் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீட்டுப் பணியாளர்கள் சார்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணை கடந்த ஜூன் 17ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.

இதையும் படிக்க:FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

இந்த வழக்கின்போது, ”இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு, அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குச் செலவிடும் தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான ஊதியமே வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 டாலர் (ரூ.667) மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருநாள் வேலை என்பது 15 முதல் 18 மணி நேரம்வரை இருக்கும். ஆனால், இவர்களது வளர்ப்பு நாய்க்குச் செலவிடும் தொகை ஆண்டுக்கு 8,584 பிரான்ங்ஸ் செலவிட்டுள்ளனர். மேலும், பாஸ்போர்ட்டை ஹிந்துஜா குடும்பத்தினர் வைத்துள்ளனர்” என எதிர்தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பான இறுதி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ’மனிதக் கடத்தல் வழக்கை மட்டும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கரை ஆண்டுகளும், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஹிந்துஜா குடும்பம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!