இரா.சம்பந்தன் புதிய தலைமுறை
உலகம்

இரா.சம்பந்தனின் இலங்கை அரசியல் வரலாறு!

PT WEB

இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான இரா. சம்பந்தன், அங்குள்ள தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்தவர். திருகோணமலையில் 1933ஆம் ஆண்டு பிறந்த அவர், கல்லூரி படிப்புக்கு பின்னர் சட்டப்படிப்பு படித்து வழக்கறிஞர் ஆனார். தமிழரசு கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன், 1977ஆம் ஆண்டு திருகோணமலையில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி. யாக தேர்வானார்.

6 முறை எம். பி.யாக தேர்வானவர் என்ற பெருமைக்கும் உரியவர் அவர். சிங்களவர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்றத்தை தொடர்ந்து புறக்கணித்ததற்காக 1983ஆம் ஆண்டு எம்.பி. பதவியை அவர் இழந்ததாக கூறப்படுகிறது.

18 ஆண்டுகளுக்கு பின்னர் 2001ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொடர்ந்து எம்.பி.யாக சேவையாற்றியவர். 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்ட ஆர்.சம்பந்தனின் உடல், 2020ஆம் ஆண்டுக்கு பிறகு ஒத்துழைக்காமல் போனது.

வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டார். அண்மையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.