எம்.பி. இரா. சம்பந்தன்  புதிய தலைமுறை
உலகம்

இலங்கை எம்.பி இரா.சம்பந்தன் காலமானார்!

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை எம்.பி.யுமான இரா. சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வயது மூப்பின் காரணமாக, பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வந்துள்ளார் சம்பந்தன். இதன்காரணமாக, கொழும்பு தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த சூழலில் நேற்று நள்ளிரவு இரா. சம்பந்தன் உயிரிழந்தார்.

பொது நிகழ்வுகளில் கடந்த சில நாட்களாக கலந்துகொள்வதை தவிர்த்து வந்த இவர், அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு மட்டுமே வெளியில் வந்துள்ளார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவர்களில் இரா. சம்பாந்தன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராகவும் இவர் திகழ்ந்து வந்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.