உலகம்

தொடர் குண்டுவெடிப்பு - இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு

rajakannan

தொடர் குண்டுவெடிப்பு சம்பங்களை அடுத்து இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வருகிறது.

ஈஸ்டர் பண்டிகை நாளான நேற்று, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

தொடர் குண்டுவெடிப்பு சம்வங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 27 வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்து‌மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன. அதேபோல், நாளை நாடு தழுவிய துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே பயங்கரவாத தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அவசர நிலைப்பிரகடன அறிவிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைய வாய்ப்புள்ளது.

தொடர் குண்டுவெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.