சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எக்ஸ் தளம்
உலகம்

நடுவானில் குலுங்கிய விமானம்| பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு.. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

Prakash J

சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. அந்த வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த மாதம் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 211 பயணிகள் உள்பட 230 பேர் பயணம் செய்தனர். SQ321 என்ற எண் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம், நடுவானில் குலுங்கியது.

இதனையடுத்து அந்த விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் 73 வயதுடைய பயணி ஒருவர், மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்பணமாக சுமார் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் மற்ற பயணிகளுக்கு முழுக் கட்டண தொகையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழக பாஜகவில் உட்கட்சி பூசலா? மேடையில் தமிழிசையைக் கண்டித்த அமித் ஷா.. #ViralVideo

இதுகுறித்து அந்த அறிக்கையில், ”பயணிகள் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவரீதியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு நீண்டகால மருத்துவச் சேவை தேவைப்படுகிறது. இதற்காக அவர்களுக்கு நிதியுதவியும் தேவைப்படுகிறது. இதையடுத்து, உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய டாலர் 25,000 முன்பணமாக வழங்கப்படுகிறது. சிறு காயமடைந்தவர்களுக்கு டாலர் 10,000 முன்பணமாக வழங்கப்படுகிறது. இதுதவிர காயம்பட்டவர்கள் விமான நிறுவனத்தை அணுகலாம்” என அதில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இவ்விமானத்தில் பயணித்தவர்களுக்கு முதுகுத் தண்டு, மூளை, தலைப் பகுதிகளில் கடுமையான காயங்கள் இருப்பதாக பயணிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் பாங்காக் மருத்துவமனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 4ஆம் தேதி நிலவரப்படி, 20 பயணிகள் இன்னும் பாங்காக்கில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக விமான நிறுவனமும் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஒடிசா| அரியணையில் ஏறும் பாஜக முதல்வர்.. அரசு இல்லம் தேடும் பணி தீவிரம்!