உலகம்

அமெரிக்காவுக்குள் நுழைய அகதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

webteam

11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, சோமாலியா, வடகொரியா, சூடான், சிரியா, ஏமன், தெற்கு சூடான் ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இந்தத் தடை உத்தரவு 120 நாட்கள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகும் அந்தத் தடை உத்தரவு முழுமையாக நீக்கப்படவில்லை.

எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் சியாட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் தலைமையில் நடந்தது. அப்போது, நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அதை நீதிபதி ஏற்கவில்லை. எனவே 11 நாடுகளின் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார். அரசின் இத்தகைய முடிவு ஒருதலைபட்சமானது என நீதிபதி ராபர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.