குரங்கம்மை pt web
உலகம்

குரங்கம்மை: “எதிர்பார்த்ததைவிட வேகமாக மாறுகிறது” கலங்கி நிற்கும் வல்லுநர்கள்

Angeshwar G

க்ளேட் 1பி

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மையால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உறைந்துள்ளன. ஆப்பிரிக்கா நாட்டில் குரங்கம்மையில் புதுவடிவிலான வைரஸானது, மிகவேகமாக பரவிவரும் நிலையில், காங்கோவிலிருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா அண்டை நாடுகளுக்கும் பாதிப்பானது பரவியுள்ளது.

குரங்கம்மை

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த 4 ஆப்பிரிக்க நாடுகளில் 222 பேர் க்ளேட் 1பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களில் ஸ்வீடன் மற்றும் தாய்லாந்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், காங்கோவில் மட்டும் ஏறத்தாழ 18 ஆயிரம் பேர் க்ளேட் I மற்றும் க்ளேட் Ib வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இந்த ஆண்டு மட்டும் இந்த குரங்கம்மை வைரஸ் பாதிப்பால் 615 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவலின்படி, இந்த ஆண்டு மட்டும் 13 ஆப்பிரிக்க நாடுகளில், 3641 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 622 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரத்தின்படி, நைஜீரியாவில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே, உலக சுதாகார அமைப்பு இந்த பரவலை அவசர நிலையாக அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில்தான் உலக நாடுகள் அனைத்தும் மிகத் தீவிரமான ஆய்வில் மூழ்கியுள்ளன. எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருவதால், ஆய்வாளர்கள் மிக உன்னிப்பாக கவனித்தும் வருகின்றனர். அதிலும், வைரஸ் பரவலை கண்காணிப்பதற்கான போதிய நிதி அல்லது உபகரணங்கள் இல்லாத நாடுகளில் பரவும் திறன் வேகமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், வைரஸ் பரவும் திறன், வைரஸ் ஏற்படுத்தும் நோயின் தீவிரம் போன்றவற்றை சரியாக கையாள, வைரஸை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒருவர், குரங்கம்மையின் அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.