உலகம்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்

webteam

சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரு எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு கப்பல்கள் தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதாகவும் இதன் பின்னணியில் சதி உள்ளதாகவும் அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையேயான பதற்றம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தங்களது படைகளை தற்காத்து கொள்ள எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்தது. 

படைகளைக் குவித்து, தங்களை மனரீதியாக பலவீனப்படுத்தவே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது. உலகில் எண்ணெய் போக்குவரத்துக்கு ஆதாரமாக உள்ள ஹோர்முஸ் நீரிணைப்பு பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரித்து வருகிறது. ஈரானை ஒட்டிய பகுதிகளில் அமெரிக்கா தன் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது. இதனால் எந்நேரமும் மோதல் வெடிக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தங்கள் நாட்டைச் சேர்ந்த இரு எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு கப்பல்கள் தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டதாகவும் இதன் பின்னணியில் சதி உள்ளதாகவும் சவுதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. தங்கள் கப்பல்கள் தாக்கப்பட்ட நிகழ்வு வளைகுடா பகுதியில் அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் உலகளவில் பதற்ற சூழலை ஏற்படுத்தும் என்று சவுதி‌ அரேபியா எச்சரித்துள்ளது. இதற்கிடையில் சவுதி அரேபிய கப்பல்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரிக்க வேண்டும் என ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.