இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல், கடந்த புதன்கிழமை 22 மாவட்டங்களிலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 225 இடங்களில், கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து 196 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க படுதோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்ரமசிங்க, பொதுத்தேர்தலில் முதல்முறையாக தோல்வியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கொழும்புவில் போட்டியிட்டிருந்த ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
விக்ரசிங்க மட்டுமின்றி அவரது கட்சியும் தேர்தலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, சஜித் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 23.3% வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளது. அதற்கடுத்தபடியாக ஜெஜெபி கட்சிக்கு 3.84% வாக்குகள் கிடைத்துள்ளன. 2.82% வாக்குகளுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு 4ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், 2.15% வாக்குகள் பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு 5ஆம் இடமே கிடைத்துள்ளது.