சர்கோ காப்ஸ்யூல் x page
உலகம்

’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!

Prakash J

’சர்கோ காப்ஸ்யூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் உள்ளே படுத்துக்கொண்டு, ஒரு பட்டனை அழுத்தினால், உள்ளிருக்கும் உயிர்வாழத் தேவைப்படும் ஆக்சிஜன் வாயுவுக்குப் பதிலாக, நைட்ரஜன் வாயு நிரம்பி, உடலில் ’ஹைபோக்சியா’ பாதிப்பு ஏற்பட்டு எந்த வலியுமின்றி உயிர் பிரியும் என இதனை வடிவமைத்த ‘லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.

இறக்க விரும்பும் நபர், முதலில் அதற்கான மனதிடம் பற்றிய ஒரு மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என அந்த நாட்டின் சட்டம் கூறுகிறது. தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்த அதனுள்ளே படுத்து கதவை மூட வேண்டும். பின் அவர் யார், எங்கிருந்து வருகிறார், பட்டனை அழுத்தினால் என்ன ஆகப் போகிறது தெரியுமா என்பன போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

பின்னர், ‘நீங்கள் இறக்க விரும்பினால் இந்த பட்டனை அழுத்தவும்’ என்ற கட்டளை வந்தவுடன் உள்ளிருக்கும் நபர் அதனை அழுத்த வேண்டும். பின் இருமுறை காற்றை சுவாசித்ததும் அவர்கள் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, மயக்க நிலைக்குச் சென்று சிறிது மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து 5 நிமிடங்களுக்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள்.

இதையும் படிக்க: விவாகரத்து பற்றிய இன்ஸ்டா பதிவு.. லைக் செய்த அபிஷேக் பச்சன்.. வதந்திகளுக்கு மறைமுக பதில்?

ஒருமுறை பட்டனை அழுத்தினால் 30 நொடிகளுக்குள் 21%-ல் இருந்து 0.05%-க்கு ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். சார்கோவில் உள்ள கணினியில் உள்ளிருக்கும் நபரின் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு அளவு, ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும். என்றாலும், மரண தண்டனைகளுக்கு இந்த இயந்திரம் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் இறப்பதற்கு 20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,600) கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் வேளையில், ஸ்விட்சர்லாந்தில் இதற்கான சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாகவும், கடுமையான உடல் பாதிப்படைந்தவர்களை சட்டப்படி கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும் அதை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் உதவியின்றி கருணைக் கொலைகளை செய்ய முயற்சிப்பதாகச் சொல்லும் இந்த நிறுவனம், ஒரு ஆண்டுகாலமாக இந்த இயந்திரத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில், மனிதர்களோ, விலங்குகளோ சோதனைக்குப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரத்தை உருவாக்க 650000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடி) செலவானதாகவும், நெதர்லாந்தில் 12 ஆண்டுகளாக இதனை ஆராய்ச்சி செய்து உருவாக்கியதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!