டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு முகநூல்
உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு | பிரதமர் மோடி கண்டனம் முதல் தேர்தல் பரப்புரையை நிறுத்திய பைடன் வரை!

ஜெனிட்டா ரோஸ்லின்

முன்னாள் அதிபரும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய நடந்த முயற்சி அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதின் மேல் துப்பாக்கியின் குண்டுகள் உரசிச்சென்றன. உடனடியாக தனது காதை பிடித்துக்கொண்டு டிரம்ப் கீழே அமர்ந்துவிட்டார்

உடனடியாக, அங்கிருந்த சிறப்பு பாதுகாப்புப் படையினர் டிரம்ப்பை அங்கிருந்து எழுப்பினர். அப்போது, டிரம்பின் வலது காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அவரை காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டிற்கு அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களுக்கு அமெரிக்காவில் இடமில்லை என்றும் கூறியுள்ளார். பதற்றம் நிறைந்த இச்சூழலில் தனது தேர்தல் பரப்புரைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் பைடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனது கண்டனத்தை பதிவு செய்த பிரதமர் மோடி, "எனது நண்பரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை.

அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மேலும், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்க மாகாணங்களின் ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அதிபர் ஒபாமா, சுந்தர் பிச்சை, எலான் மஸ்க் போன்ற தொழில்துறையினரும் துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.