உலகம்

வாழ்வில் சோகம்.. விரக்தியில் ஜன்னலை உடைத்த பெண் பயணி: விமானத்தில் பரபரப்பு

webteam

சீனாவில் கடந்த மாதம் விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மதுபோதையில் ஜன்னலை தாக்கி உடைத்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சீனாவில் விமானம் ஒன்று சைனிங்கிலிருந்து கிழக்கு கடலோர நகரமான யான்செங்கிற்கு புறப்பட்டு சென்றது. அப்போது அதன் உள்ளே அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் தனக்கு அருகே இருந்த விமானத்தின் ஜன்னலை உடைத்துள்ளார். ஆகவே அந்த விமானம் மேற்கொண்டு பறக்காமல் ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோவில் தரை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் வெய்போ எனும் சீன சமூக ஊடக தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. ஆகவே இது தொடர்பான செய்தி வைரலாக மாறியது. விமாநிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பயணி போதையில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவரது பெயர் லி என்பதும் அவர் விமானம் புறப்படுவதற்கு முன்பாக தொடர்ந்து அழுது கொண்டு இருந்ததையும் ஜன்னலை தாக்கி உடைக்க முயன்றதையும் அருகில் அமர்ந்திருந்த பயணிகள் பார்த்துள்ளனர். இவரது குடும்ப உறவில் ஏற்பட்ட தோல்வியால் இவர் விரக்தியில் இவ்வாறு குடித்து விட்டு நடந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த மாதம் சீன உள்நாட்டு லூங் ஏர்லைன்ஸ் விமானத்தின் போது நிகழ்ந்ததாக தி சன் தெரிவித்துள்ளது. 29 வயதான லி, மே 25 அன்று விமானத்தில் பயணித்த போது "தனது கட்டுப்பாட்டை மீறி உணர்ச்சிவசப்பட்டார்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தி கார்டியன் பத்திரிகை அறிக்கையின்படி, ஜெங்ஜோ காவல்துறையினர் உறவு முறிவால் இது ஏற்பட்டதாக கூறியுள்ளனர். இவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு 'பைஜியு' என்று அழைக்கப்படும் சீன தானிய வகை ஆல்கஹாலை அரை லிட்டர் உட்கொண்டதாக கூறியுள்ளனர். இந்தப் பானத்தில் 35 முதல் 60 சதவீதம் வரை ஆல்கஹால் அளவு உள்ளது. நல்ல வேளையாக இந்த விபரீத முயற்சியால் விமானத்தில் எந்த விபத்தி ஏற்படவில்லை.