போதைப்பொருள் கூகுள்
உலகம்

இலங்கை: கொக்கேய்ன் கடத்தலில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கைது!

Jayashree A

சமீபகாலமாக போதைப்பொருட்களின் நடமாட்டம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதை முற்றிலுமாக நிறுத்தமுடியவில்லை.

இந்நிலையில் போதைபொருள் கடத்தல் சம்பவத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் கடத்திக்கொண்டு வந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின்படி கடந்த சில நாட்களுக்கு முன் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் போதைப்பொருள்களுடன் எத்தியோப்பியாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் சென்றுள்ளார். வழியில் இலங்கையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அப்பெண்ணை அந்நாட்டு சுங்கப்பிரிவினர் சந்தேகத்தின்பேரில் விசாரனை செய்துள்ளனர்.

அப்போது அவரின் உடமைகளை சோதனை செய்ததில், வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள் பொருட்களுடன் 2 கிலோ 851 கிராம் கொக்கேய்ன் மறைத்து எடுத்து வரப்பட்டது தெரிந்தது. இதன் மதிப்பு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் என்று சொல்லப்படுகிறது. இதனை அடுத்து இவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் போதைபொருள் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், இலங்கையில் இவர் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.