model image freepik
உலகம்

காதலரிடம் ஆலோசனை.. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 13 உறவினர்களை விஷம் வைத்துக் கொன்ற பாகி. சிறுமி!

Prakash J

காதல் என்பது ஓர் உணர்வுப்பூர்வமான விஷயம். அது ஒரு மனிதனுக்குள் வந்துவிட்டால் அவனுடைய பசி, தூக்கம், மகிழ்ச்சி, மாற்றம் என எல்லா வகை உணர்வுகளும் பலவகை மாற்றங்களை எதிர்கொள்ளும். இதற்கு எத்தனையோ விஷயங்களை நாம் உதாரணமாகச் சொல்ல முடியும். ஆனால், அதே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உறவுகளால் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்படுவதும் உண்டு.

ஆனால், இங்கே ஒரு சிறுமி, தன் காதலுக்காக உறவினர்களையே விஷம் வைத்துக் கொன்றுள்ளார். அதிலும் அவர் விஷம் வைத்தது ஒருவருக்கோ, இருவருக்கோ அல்ல... 13 பேருக்கு. தற்போது இந்த விஷயம் உலகளவில் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

model image

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைர்பூருக்கு அருகில் உள்ள ஹைபத்கான் ப்ரோஹி கிராமத்தில் வசித்து வந்த சிறுமி ஒருவர், இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியவந்தது. அவர்கள் சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இளைஞரை திருமணம் செய்துவைக்கவும் மறுத்தனர். இது அச்சிறுமிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிக்க: மாலத்தீவுக்கு மீண்டும் கைகொடுத்த இந்தியா.. பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிந்த பெரிய ஒப்பந்தம்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது குடும்பத்தையே தீர்த்துக்கட்டும் முடிவுக்கு மாறிய அந்தச் சிறுமி, இதற்காக தனது காதலரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன்பேரில் திட்டத்தையும் தீட்டியுள்ளார். இதற்காக, வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார்.

இது தெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் 13 பேர் ரொட்டி சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். பின்னர், ஒரேநேரத்தில் அவர்கள் அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

model image

ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம்19ஆம் தேதி நடைபெற்றது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் சிறுமி உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

தனது காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே காதலன் துணையின் விஷம் வைத்துக் கொன்றதாக போலீசாரிடம் உணமையை தெரிவித்துள்ளார். அதன்பேரில், அந்தச் சிறுமி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், தந்தை உள்பட குடும்ப உறவுகள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்த கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: ஜம்மு காஷ்மீர் | வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே 5 MLA... ஆட்சியமைக்க பாஜக போடும் பக்கா ப்ளான்!