உலகம்

பிஸ்கட்டில் பற்பசை தடவி பிராங் ஷோ - சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்

webteam

ஆதரவற்ற ஒருவருக்கு க்ரீம் பிஸ்கெட்டில் க்ரீமுக்கு பதிலாக பற்பசையை தடவிக்கொடுத்து பிராங் செய்த வாலிபருக்கு 15 மாதம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஸ்பெயினைச் சேர்ந்த கங்குவா ரென் என்ற இளைஞர்(21) பிராங்க் ஷோ செய்து தனது யு டியூப் பக்கத்தில் பதிவேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி 2017ம் ஆண்டு ஆதரவற்ற ஒருவரிடம் கங்குவா செய்த பிராங்க் ஷோ கடுமையான கண்டனத்துக்கு ஆளானது.

சூப்பர் மார்க்கெட் அருகே அமர்ந்திருந்த ஆதரவற்ற ஒருவரிடம் கங்குவா க்ரீம் பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளார். ஆனால் க்ரீமுக்கு பதிலாக பல் துலக்கப் பயன்படும் பற்பசையை தடவி கொடுத்துள்ளார். அதனை வாங்கு உண்ட ஆதரவற்ற நபர் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனை வீடியோவாக யு டியூப் தளத்தில் பதிவேற்றியுள்ளார் கங்குவா. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கங்குவாவின் மனிதாபிமானமற்ற செயலுக்கு பலரும் கண்டன குரல்களை பதிவு செய்தனர். பின்னர் கங்குவா மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது.

(கங்குவா)

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கங்குவா ரென்னுக்கு 20 ஆயிரம் யூரோக்கள் அபராதமும், 15 மாத சிறைத்தண்டனையும் விதித்து பார்சிலோனா நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. மேலும் கங்குவா ரென்னுக்கு சொந்தமான சமூக வலைதளங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முடக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.