korea border எக்ஸ் தளம்
உலகம்

கண்ணிவெடி புதைப்பு.. கூடுதல் ராணுவம்! தென்கொரிய எல்லை நிரந்தர துண்டிப்பு.. வேகம் காட்டும் வடகொரியா!

Prakash J

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்துவரும் எல்லைப் பிரச்னையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது அந்நாடு. தற்போது, அணு ஆயுத மூலப்பொருளான யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.

கிம் ஜாங் உன்

வடகொரியா இந்த அளவிற்கு யுரேனியம் தயாரிக்கும் பணியிலும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். மேலும், வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென்கொரியாவின் திறன்களுடன் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை இணைக்கும் திட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள், நீண்டதூரம் சென்று குண்டுவீசும் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை தென்கொரியாவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 7 முறை புதினுடன் பேசிய ட்ரம்ப்? புத்தகத்தில் வெளிவந்த புது தகவல்.. அமெரிக்க தேர்தலில் புகைச்சல்!

இதையடுத்து, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, வடகொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தென்கொரியாவுடனான எல்லைப் பகுதிகளை நிரந்தரமாக துண்டிக்க உள்ளதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி வடகொரியாவில் இருந்து தென்கொரியா செல்லும் சாலை, ரயில்வே வழித்தடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எல்லைப்பகுதிகளில் கண்ணிவெடிகளைப் புதைத்து, தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணம் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கமலா ஹாரிஸ் பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை.. படித்த வாசகர்களுக்கு ஏமாற்றம்; நெட்டிசன்கள் கிண்டல்!