அமைதி நோபல் பரிசு எக்ஸ் தளம்
உலகம்

2024 அமைதிக்கான நோபல் பரிசு| ஜப்பானின் நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த அக்டோபர் 6ஆம் தேதிமுதல் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, முதலாவதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இதையும் படிக்க: ரத்தன் டாடா மறைவு | சர்ச்சைக்குரிய இரங்கல் பதிவு.. எழுந்த எதிர்ப்பு... உடனே நீக்கிய பேடிஎம் சி.இ.ஓ.!

அடுத்து, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃரி ஹிண்டன் ஆகியோருக்கும், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, புரதத்தின் வடிவம் குறித்த ஆராய்ச்சிக்காக, டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (அக்.11) அமைதிக்கான நோபல பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை அந்த அமைப்பு மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ந்து அந்த அமைப்பு பணியாற்றி வந்துள்ளது. அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை ஜப்பானிய அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிக்க: வங்கதேசம் | பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடம்.. காளி கோயிலில் திருட்டு.. போலீஸ் விசாரணை!