Nihon Hidankyo இணைத் தலைவர் தோஷியுகி மிமாகி pt web
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜப்பான் அமைப்பு.. அதன் பணிகள் என்ன? ஒரு வரலாற்றுப் பார்வை..

PT WEB

ஹிரோஷிமா நாகாசாகி மீது நடத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களால் உருவாக்கப்பட்டதுதான் ஜப்பானை சேர்ந்த நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பு. அணு ஆயுத தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களை ஹிபாகுஷா என்றும் அழைக்கின்றனர்.

அணு ஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்குவதற்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதற்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி நோபல் பரிசு

1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பு தொடங்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் Japan Confederation of A and H bomb Sufferers organisation என அழைக்கின்றனர். உயிர் பிழைத்தாலும் தங்களை புரிந்துகொள்ளாத உலகில் ஹிபாகுஷாவின் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருந்தது.

கதிரியக்கத்தால் ஏற்பட்ட நச்சுத்தன்மை, சமூகத்தில் இழிவாக பார்க்கப்படுவது, மருத்துவ தேவைகளுக்கு அரசிடமிருந்து போதிய உதவி இல்லாமை போன்றவை அவர்களை வாட்டி வதைத்தன. இத்தனை சவால்களுக்கு நடுவிலும் நிகோன் ஹிடாங்க்யோவினர் தங்களுக்கு மட்டுமல்லாது, தங்களது எதிர்கால சந்ததியினருக்கும் நீதி தேடி போராட்டத்தை தொடர்ந்தனர்.

இரண்டு முக்கிய குறிக்கோள்களை முன்வைத்து அவர்களது பயணம் தொடர்கிறது. அணுகுண்டு தாக்குதலில் பிழைத்தவர்களுக்கு தேவையான உதவிகளை பெறுவது ஒரு குறிக்கோள் என்றால் உலகில் அணுஆயுதங்களை முழுமையாக அழிப்பது மற்றொன்று. தொடக்கம் முதலே இந்த குழுவினர் சர்வதேச அளவிலேயே செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பயணித்து தாங்கள் சந்தித்த வேதனைகளை எடுத்துக்கூறி அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை முதல் சர்வதேச தலைவர்களை சந்திப்பது வரை இவர்கள் தொய்வின்றி செயலாற்றி வருகின்றனர். சர்வதேச அளவில் இவர்களது முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விடவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தம், கவனம் பெறுவதற்கு அவர்கள் முக்கிய பங்காற்றினர். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஜப்பானே இன்னமும் கையெழுத்திடாதது சோகம். அணு ஆயுதங்களுக்கு எதிராக ஜப்பானின் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் நிகோன் ஹிடாங்க்யோ அமைப்பு செயலாற்றி வருகிறது.