israel - hamas war twitter
உலகம்

தொடர்ந்து நிலைகுலையும் ஹமாஸ்.. இஸ்ரேல் தாக்குதலில் மீண்டும் முக்கியத் தலைவர் பலி!

Prakash J

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 15வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏராளமான வீடுகள், கட்டடங்கள் குண்டுவீச்சால் உருக்குலைந்து போய் இருக்கின்றன. இந்த நிலையில், ஹமாஸின் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இதுவா நாகரீகம்! வங்கதேச ரசிகரை அவமானப்படுத்திய இந்திய ரசிகர்கள்..ரோகித் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்

இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் ஒரு ஹமாஸ் தலைவர் உயிரிழந்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் படைத் தளபதிகளில் முக்கியமானவரான தலால் அல் ஹிந்தி, இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை ஹமாஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்த 6 தலைவர்களை, இஸ்ரேல் ராணுவம் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.