உலகம்

நேரலையின்போது விழுந்த பல்: சாதுர்யமாக நிலைமையை சமாளித்த செய்தி வாசிப்பாளர்!!

webteam

நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த வாசிப்பாளரின் பாதிக்கப்பட்ட பல் ஒன்று திடீரென்று உடைந்து விழுந்தது. ஆனால் கொஞ்சமும் பதட்டத்தைக் காட்டாத செய்தி வாசிப்பாளர் நேர்த்தியாக அதனை சமாளித்து தொடர்ந்து செய்தி வாசித்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைனைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் மரிச்கா படால்கோ, பரபரப்பாக செய்தியை நேரலையில் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவரது முன்பல் விழுந்தது. இதனை உணர்ந்த மரிக்சா தன் கையில் பல்லை எடுத்துக்கொண்டு வழக்கமான முக பாவனைகளுடன் செய்தியை தொடர்ந்து வாசித்து முடித்தார். அதேபோல் உடைந்து பல் தெரியும்படியும் அவர் செய்தியை வாசிக்காமல் சமாளித்து வாசித்தார்.

செய்தியை நேரலையில் பார்த்த பலருக்கும் கூட என்ன நடந்தது என தெரியவில்லை. இதனைக் கண்டுகொண்ட பல நேயர்களும் கூட செய்தி வாசிப்பாளருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தை மிகவும் சாதுர்யமாக சமாளித்ததாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து தெரிவித்த மரிச்கா, 10 வருடங்களுக்கு முன்பு இரும்பு கடிகாரத்தால் தன் மகள் தாக்கியதில் பாதிக்கப்பட்ட பல் அது. என்னுடைய 20 வருட செய்தி வாசிப்பாளர் பயணத்தில் இது ஒரு ஆர்வமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.