mdh, everest, nepal twitter
உலகம்

தீங்கு விளைவிக்கும் ரசாயன செய்தி| எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களுக்குத் தடைவிதித்த நேபாள அரசு!

Prakash J

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களில் எவரெஸ்ட்டும் (Everest) ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய மீன் குழம்பு மசாலாவை (Everest Fish Curry Masala) உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில், எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டிருந்தது.

அதுபோல் ஹாங்காங் அரசும் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், நேபாள அரசும் எவரெஸ்ட் மற்றும் MDH உற்பத்தி செய்யும் மசாலாப் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது.

நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையானது, எவரெஸ்ட் மற்றும் MDH மசாலாப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடுக்கானப் பரிசோதனையை தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”தோனிக்கான விசில் சத்தம் என் காதுகளையே வலிக்க செய்தது” - நேரில் பார்த்த ஆஸி. வீராங்கனை உருக்கம்!

நேபாள உணவு தொழில்நுட்பத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன், ”எவரெஸ்ட் மற்றும் எம்.டி.ஹெச் பிராண்ட் மசாலாப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அவற்றை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளோம். மசாலாப் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் தடயங்கள் இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து இது வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, எவரெஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “எவரெஸ்ட்டின் தயாரிப்புகள் எந்த நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. எங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை மற்றும் உயர் தரம் வாய்ந்தவை. எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் கடுமையான தரக் கட்டுப்பாடு சோதனைகளுக்கு உட்படுகின்றன” எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: CSK VS RCB| போட்டியைக் காண டிக்கெட் புக்கிங்.. ரூ.3 லட்சத்தை இழந்த இளைஞர்.. போலீஸ் விசாரணை!