உலகம்

மாஸ் காட்டும் 2020 மார்ஸ் ரோவர் ! நாசாவின் கனவுத் திட்டம்

jagadeesh

மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பி வைக்கும் தனது கனவுத் திட்டத்தை நோக்கி நாசா பயணித்து வருகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கைவசமிருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பூமியின் இயற்கையான நீட்சியாகக் கருதப்படும் இன்னொரு கோள் செவ்வாய். என்றாவது ஒருநாள் அங்கு மனித வாழ்க்கை சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் உலக நாடுகள் எல்லாம் இந்தக் கோளை ஆய்வு செய்து வருகின்றன. இவற்றுள் முந்தி நிற்பது அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு. பல செயற்கைக் கோள்களையும், Pathfinder, Spirit, Opportunity, Curiosity போன்ற உலவு வாகனங்களையும் செவ்வாய்க்கு அனுப்பி ஆராய்ச்சியை துரிதப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் வரும் 2020 ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப உள்ள ஆய்வுக்கலத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் 2020 ரோவர் என்ற ஆய்வுக்கலத்தை நாசா செவ்வாயில் களமிறக்கவுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா? ஏற்கெனவே அங்கு உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து இந்த ரோவர் ஆய்வு செய்யும்.

கியூரியாசிட்டி ரோவரை போன்று 6 சக்கரங்களை கொண்ட இந்த மார்ஸ் ரோவரில் துல்லியமாக படம்பிடிக்கக்கூடிய 23 கேமராக்கள், காற்றின் வேகத்தை உணர 2 கருவிகள், லேசர்கள் உள்ளிட்ட சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரோவர் பாறை போன்ற கரடு முரடான பாதைகளிலும் நாள் ஒன்றுக்கு 180 மீட்டர் தூரத்திற்கு பயணிக்கும். அமெரிக்கா அனுப்பும் ஐந்தாவது ரோவர் ரோபாவான இது, வரும் ஜூலை மாதம் செவ்வாய்க்கு பயணிக்க உள்ளது. இந்த ரோவர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரையிறங்கும்.

மார்ஸ் 2020-ஐ விண்ணில் ஏவும் பணி லாஸ் ஏஞ்சல்சின் அருகே பசடேனாவில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மார்ஸ் 2020 ரோவர் மிஷனுடன் சிறிய ரக ஆளில்லா புதிய ஹெலிகாப்டரை இணைத்து விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது. 1.8 கிலோகிராம் எடைக்கொண்ட இந்த மார்ஸ் 2020 ரோவரின் உடற்பகுதியில் இந்த ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ளது. இந்த ரோவருடன் ரோபோவும், மைக்ரோ சிப்பும் செவ்வாய்க்கு செல்லவுள்ளது. மார்ஸ் 2020 ரோவரின் ஆயுட்காலம் 2 ஆண்டுகளாகும்.

செவ்வாய்க்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் 5 ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டுவரும் நிலையில், அமெரிக்காவுக்கு போட்டியாக வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் சீனாவும் முதன்முறையாக விண்கலத்தை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.