உலகம்

மியான்மரில் அரசியல் பதட்டம்: ஓராண்டுக்கு அவசர நிலை அறிவித்தது ராணுவம்!

webteam

மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது

மியான்மர் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவம், அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ராணுவத்தின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிபர் வின் மைன்ட், ஆளுங்கட்சியின் முக்கியத் தலைவர் ஆங் சான் சூச்சி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில் ராணுவம் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தலைநகர் நேபிதா மற்றும் முக்கிய நகரான யாங்கூனின் வீதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு முக்கிய நகரங்களில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.