உலகம்

மைக்ரோசாஃப்ட் நிறுவன இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்

webteam
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான பில் கேட்ஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா வெளியிட்டுள்ள அறிக்கையில், பில் கேட்ஸ் விலகல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்ய நாதெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக பில் கேட்ஸ் பங்களிப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் அதிகமான நேரம் செலவிடுவதற்காக இயக்குநர் குழுவிலிருந்து விலகியதாகவும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ 
பில் கேட்சுடன் இணைந்து பணியாற்றியது குறித்து மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளிப்படுத்தியுள்ளார் சத்ய நாதெள்ளா. உலகத்தையே கணினிமயமாக மாற்றியுள்ள மைக்ரோ சாஃட் நிறுவனத்தை, தனது பால்ய கால நண்பர் பால் ஆலனுடன் இணைந்து 1975-ஆம் ஆண்டு நிறுவினார் பில் கேட்ஸ். 2000-ஆவது ஆண்டு வரை மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். 
2014- ஆம் ஆண்டு இந்தப் பதவிக்கு வந்த சத்ய நாதெள்ளாவுக்கு தொழில்நுட்ப ஆலோசகராக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சேவையைத் தொடர்ந்தார் பில் கேட்ஸ். தற்போது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.