உலகம்

அனகோண்டாவை கையில் பிடிக்கும் நபர்.. திகிலூட்டும் காட்சிகள்: வைரலாகும் பழைய வீடியோ

jagadeesh

பிரேசில் நாட்டின் அமேசான் காட்டில் இருக்கும் ஆற்றில் அனகோண்டா வகை பாம்பை கைகளால் பிடிக்க முயற்சிக்கும் 2014 ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகிலேயே மிகவும் ஆபத்தான அச்சுறுத்தும் வகையில் இருக்கும் பாம்பு வகை அனகோண்டா. இவை பெரும்பாலும் தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும். மிக முக்கியமாக அனகோண்டா வகை பாம்புகள் பிரேசில் நாட்டின் அமேசான் காடுகளில் அதிகம் தென்படும். நீர் நிலைகளிலேயே வாழும் தன் இரையை பிடியில் இறுக்கிக் கொன்று உட்கொள்ளும். அனகோண்டா பாம்பை வைத்து பல திகிலூட்டும் படங்களும் ஹாலிவுட்டில் வெளி வந்து இருக்கிறது.

இப்படி அச்சமூட்டும் அனகோண்டாவை கையில் பிடிக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து "டெய்லி மெயில்" செய்தியின்படி பிரேசில் நாட்டின் சாண்டோ மரியா எனும் ஆற்றில் சிர்லேய் ஒலிவிரியா, அவரது கணவர் பெட்டினோ போர்க்ஸ் மற்றும் நண்பர் ரோட்ரிகோ சான்டோஸ் ஆகியோர் படகில் சென்று கொண்டிருக்கும்போது சுமார் 17 அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு தென்பட்டுள்ளது. அதன் வாளைப் பிடித்து இழுத்துள்ளார் போர்க்ஸ்.

அனகோண்டாவை பிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட, அவர்களின் படகு தாறுமாறாக சுழலுகிறது. இந்த சம்பவத்தின்போது போர்க்ஸின் மனைவி ஒலிவிரியா பாம்பை விட்டுவிடுமாறு கத்துகிறார். இதில் ஒரு கட்டத்தில் போர்க்ஸின் பிடியிலிருந்து அனகோண்டா நழுவி தப்பிச் செல்கிறது. இந்த மொத்த சம்பவமும் வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அனகோண்டா பாம்பைப் பிடிக்க முயன்ற 3 பேருக்கும் தலா 600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.