புய்கோட் கோட்டை கூகுள்
உலகம்

மகாராஷ்டிரா: கோட்டையை சுற்றிப்பார்க்க சென்ற புதுமணப்பெண் மரணம்; காரணம் என்ன?

Jayashree A

மகாராஷ்டிரா மாநிலம் துல்ஜாபூர் தாலுகாவைச் சேர்ந்த மீர் ஷேக் என்பவருக்கு, கடந்த வாரம் நிலோபர் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியர், சோலாப்பூரின் அருகில் இருக்கும் நல்துர்க்கில் உள்ள புய்கோட் கோட்டையை சுற்றிப்பார்க்க விரும்பி உறவினர்களோடு அங்கு சென்றுள்ளனர்.

கோட்டையை சுற்றிப்பார்த்து செல்ஃபி எடுத்த தம்பதிகள் இருவரும், கோட்டையின் உச்சிக்கு செல்ல ஆசைப்பட்டு, கோட்டையின் உயரமான பகுதியான உபாலி புருஜாவுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட நிலோபர், கோட்டையின் நுனிக்கு சென்றுள்ளார்.

அச்சமயம் பலத்த காற்று வீசியுள்ளது. அதில் நிலைத்தடுமாறிய நிலோபர் கோட்டையின் மேலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட மீர்ஷேக் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

திருமணம் முடிந்து சில நாட்களுக்குள்ளாக மணமகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.