உலகம்

இந்தோனேஷிய விமான விபத்து: 24 உடல்கள் மீட்பு

இந்தோனேஷிய விமான விபத்து: 24 உடல்கள் மீட்பு

webteam

இந்தோனேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.

வழக்கம் போல நேற்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர். விமானத்தை டெல்லியை சேர்ந்த விமானி பவ்யே சுனேஜா இயக்கினர். அவருடன் துணை விமானி ஹர்வினோ இருந்துள்ளார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.

இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர். விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதக்கின்றன. அவற்றை மீட்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பர்ஸ், புத்தகம், ஹேண்ட்பேக், குழந்தையின் ஷூ ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது கிடைத்தால்தான் விபத்துக்கான காரணம் தெரிய வரும். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அதுதான் காரணமா, வேறு ஏதும் காரணமாக என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடலில் மூழ்கி தேடும் வீரர்கள், மேலும் பலரின் உடல்களை தீவிரமாக தேடி வருவதாகவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.