உலகம்

கிராமி விருது விழா: விவசாயிகள் ஆதரவு மாஸ்க் உடன் கவனம் ஈர்த்த லில்லி சிங்!

jagadeesh

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் கிராமி விருது வழங்கும் விழாவில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவான வாசகம் கொண்ட மாஸ்க் அணிந்து வந்த யூடியூப் பிரபலம் லில்லி சிங் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

அமெரிக்காவில் இன்று இசைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான கிராமி விருது விழா நடைபெற்றது. அதில், யூடியூப் பிரபலமான லில்லி சிங், இந்திய விவசாயிகளுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக பொருள்படும் "I stand with farmers" என்ற வாசம் கொண்ட முகக் கவசத்தை அணிந்து வந்தார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னதாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாக தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரியானா தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரியானா, “இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

இதேபோல் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பல இந்திய பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை, அதில் யாரும் தலையிட வேண்டாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.