உலகம்

சவுதி அரசின் கட்டாயத்தால் ராஜினாமா செய்த பிரதமர்

webteam

சவுதி அரேபிய அரசு கட்டாயப்படுத்தியதால் தான் லெபனான் பிரதமர் சத் அல் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹஸன் நஸரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். 

அண்மையில் சவுதி அரேபியா சென்ற லெபனான் பிரதமர் சத் அல் ஹரிரி, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தன்னை கொல்ல சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதன் காரணமாகவே தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சவுதி அரேபிய அரசு கட்டாயப்படுத்தியதால் தான் லெபனான் பிரதமர் சத் அல் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையத் ஹஸன் நஸரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் ஹரிரி நாடு திரும்பும் வரை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், அவர் வந்த பிறகே ராஜினாமா செய்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றும் நஸரல்லா‌ வலியுறுத்தியுள்ளார். இதனால் அந்நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 

இதற்கிடையே லெபனான் பிரதமர் சத் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதை தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் க‌வலை அடைந்துள்ளார். மேலும் மக்களின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.