உலகம்

முஷரப் மேல்முறையீட்டு மனுவை திருப்பி அனுப்பிய லாகூர் நீதிமன்றம்

jagadeesh

மரண தண்டனையை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, லாகூர் உயர்நீதிமன்றம் திருப்பி அனுப்பியது.

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த முஷரப், அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பேற்ற பர்வேஸ் முஷரப் 2007 ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்தார். நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முடக்கியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து பெஷாவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில்‌ தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முஷரப் லாகூர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரது மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, லாகூர் உயர் நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது. குளிர்கால விடுமுறைக்காக நீதிபதிகள் பலர் விடுப்பில் இருப்பதால், தற்போதைக்கு இந்த மனுவை விசாரிக்க முடியாது என லாகூர் உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. நீதிபதிகளின் விடுப்பு முடிந்ததும், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் மேல் முறையீட்டு மனுவை மீண்டும் தாக்கல் செய்யும்படி நீதிமன்ற பதிவாளர் முஷரப்பின் வழக்கறிஞரிடம் அறிவுறுத்தியுள்ளார்.