போயிங் விமானம் ட்விட்டர்
உலகம்

கொரியா | 15 நிமிடங்களில், சுமார் 26,900 அடி இறங்கிய விமானம்.. திடீர் அழுத்தத்தால் பயணிகள் தவிப்பு!

Jayashree A

கொரியன் KE189 என்ற போயிங் 737 ரக விமானமானது கடந்த சனிக்கிழமை (ஜூன் 22) இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 125 பயணிகளுடன் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது.

இந்த விமானமானது மறுதினமான நேற்று ஜேஜு தீவுக்கு (காலை 8.40 மணி அளவில்) மேலே சென்றபொழுது, பணிப்பெண் பயணிகளுக்கு உணவு பரிமாறத் தொடங்கியிருக்கிறார். அச்சமயம் விமானம் சுமார் 35,000 அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.

கொரிய விமானம்

8.50 மணி அளவில் தங்களின் உணவை பயணிகள் சாப்பிடத் துவங்கிய சமயம், திடீரென்று விமானம் 10 நிமிடங்களில் 8,900 அடிக்கு இறங்கியுள்ளது. ஆன்லைன் ப்ளைட்ரேடார் (flightradar) 24-ன் தரவு இதை உறுதிசெய்துள்ளது. 15 நிமிட இடைவெளியில், விமானம் சுமார் 26,900 அடி இறங்கியுள்ளது.

திடீரென்று விமானம் கீழிறங்கியதால் அதில் பயணம் செய்த பயணிகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானார்கள். இதனால் சில பயணிகளின் காதுகளில் கடுமையான வலி ஏற்பட்டு இருக்கிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இது நிக்ழந்ததாக தெரிகிறது.

இருப்பினும், விமானம் அன்று இரவு 7.38 மணிக்கு இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 15 பயணிகளின் காதுகள் அதீத வலி மற்றும் ஹைப்பர்வெண்டிலேஷன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 13 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் கடுமையான பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

விமானம் தரையிறக்கப்பட்ட பின், பயணிகளை பத்திரமாக தங்கவைக்க ஏற்பாடு செய்த விமான நிறுவனம், பாதிக்கப்பட்ட பயணிகளை பத்திரமாக வேறொரு விமானத்தில் அனுப்பி வைத்தனர். அதற்காக மாற்று விமானமானது நேற்று மதியம் 12.24 மணிக்கு தைச்சுங் விமான நிலையத்தை சென்றிருந்தது.

விமானத்திற்குள் நடந்த இச்சம்பவத்தை பயணி ஒருவர் தனது கைபேசியில் படம் எடுத்துள்ளார். அதில் விமானமானது திடீரென்று கீழே இறங்கும் சமயம், பயணிகளின் தலைக்கு மேல் இருக்கும் சிறு அறையிலிருந்து ஆக்ஸிஜன் முகமூடிகள் தொங்குகின்றன.

முன்னதாக கடந்த மாதம் லண்டனில் இருந்து 211 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக நடுவானில் பயங்கரமாக குலுங்கியது. மேலும் அவ்விமானம் கட்டுப்பாட்டை இழந்து 4.6 நொடிகளில் 178 அடி கீழே இறங்கியது குறிப்பிடத்தக்கது; அதிலொருவர் உயிரிழந்திருந்தார். சமீபத்தில்தான் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டுமொரு முறை இப்படியான சம்பவம் நடந்திருப்பது, விமான பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.