கிம் ஜாங் உன் ட்விட்டர்
உலகம்

வடகொரியா | வெள்ளத்தால் உயிர்பலி.. தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

Prakash J

வடகொரியா நாட்டின் செய்திகள் எதுவும் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. காரணம் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானவை என்று சொல்லப்படுகிறது. பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் வடகொரியா, அடிக்கடி ஏவுகணைகளை ஏவி பரிசோதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தடுக்கத் தவறியதால், 30 அதிகாரிகளை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தூக்கிலிட உத்தரவிட்டதாகத் தற்போது செய்தியொன்று வெளியாகி உள்ளது.

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,000 வீடுகள், நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்தப் பாதிப்புகளில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கிம் ஜாங் உன், அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: அன்று கேலி கிண்டலுக்கு ஆளானவர்... இன்று பாராலிம்பிக்கில் சாதனை..! யார் இந்த தீப்தி ஜீவன்ஜி?

மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியுள்ளது. இந்த வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக தென்கொரியாவின் சோசன் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில், வடகொரியா தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. முன்னதாக, வடகொரிய வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை அதிபர் கிம் ஜாங் உன் மறுத்திருந்தார். “இவை வடகொரியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைக்கத் தென்கொரியா பரப்பும் வதந்திகள்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரோகித் பற்றிய பேச்சே இல்லை.. ஆனா SKY-ஐ விடாத மும்பை இந்தியன்ஸ்.. வெளியான தகவல்!