டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரீஸ் எக்ஸ் தளம்
உலகம்

அதிபர் தேர்தல் | கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்.. பரபரக்கும் அமெரிக்க அரசியல் களம்!

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்வும் களத்தில் இருந்தனர். இதில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள், முன்னாள் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாக பார்க்கப்பட்டன. குறிப்பாக, பிரசாரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் மீது மர்ம நபர் தாக்கிய துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிர் தப்பிப் பிழைத்தது பெரிய அளவில் பேசுபொருளானது. இதனால், ட்ரம்புக்கு ஆதரவு அலையும் அதிகரித்தது.

கமலா ஹாரிஸ், ஜோ பைடன், ட்ரம்ப்

இந்தச் சூழலில் ஏற்கெனவே வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் ஜனநாயக கட்சி வேட்பாளரிலிருந்து அதிபர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இதையடுத்து, ஜோ பைடனே துணை அதிபரும் இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனே அறிவித்தார்.

இதன் காரணமாக, அமெரிக்க அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரீஸ், தேர்தல் பரப்புரைக்காக நிதி திரட்டுவதில் வரலாறு படைத்துள்ளார். 24 மணி நேரத்தில் மட்டும், பல ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களிடம் இருந்து மொத்தம் 81 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 677 கோடி என்றே கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவர்கள் முதல்முறையாக இந்தத் தேர்தலுக்காக நிதி அளித்துள்ளனர்.

இதையும் படிக்க: அமெரிக்கா | அதிபர் தேர்தலிலிருந்து விலகியது ஏன்? ஜோ பைடன் விளக்கம்!

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பைவிட, கமலா ஹாரீஸுக்கு ஆதரவு பெருகிவருவதாக தற்போதைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. சா்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘இப்ஸோ’ உடன் இணைந்து ‘ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்டு ட்ரம்ப்பைவிட கமலா ஹாரிஸுக்கு 2 சதவீதம் அதிகம் போ் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னா் இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட இதேபோன்ற கருத்துக்கணிப்பில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருந்தாா். அவருக்கு 44 சதவீதம் பேரும், கமலா ஹாரிஸுக்கு 42 பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனா். பின்னா் ஜூலை 15-16 தேதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே 44 சதவீத வாக்குகளைப் பெற்று சமமாக இருந்தனா். ஆனால், தற்போது தோ்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், கருத்துக்கணிப்பில் ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளாா் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: விவாகரத்திற்குப் பிறகு மகனுடன் நடாஷா வெளியிட்ட படம்.. ஹர்திக் பாண்டியா போட்ட ரியாக்‌ஷன்!

கமலா ஹாரீஸ் இன்னும் அக்கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அக்கட்சி மாநாட்டின்போது அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் கமலா ஹாரீஸ் வெற்றிபெற 1,976 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதைவிட அதிக எண்ணிக்கையிலான கட்சிப் பிரதிநிதிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு மீண்டும் புத்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி வரும் டொனால்டு ட்ரம்ப், “கமலா ஹாரீஸ் ஓர் இடதுசாரி பைத்தியம்” எனக் கூறியிருப்பது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர், ”கடந்த மூன்றரை ஆண்டுகளாக, பைடன் ஏற்படுத்திய பேரழிவின் பின்னனியில் உந்து சக்தியாக கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். அவர் ஒரு இடதுசாரி பைத்தியம். அவர் அதிபரானால் நாட்டை அழித்துவிடுவார். அதனை நாங்கள் நடக்கவிட மாட்டோம். அமெரிக்க வரலாற்றில் தீவிர தாராளவாத மனப்பான்மை கொண்ட அரசியல்வாதி கமலா ஹாரிஸ். அவர் பயங்கரமானவர். பெர்னி சாண்டர்ஸைவிட தாராளவாதி. கொடூரமான அதிபரால் நியமிக்கப்பட்டவர் கமலா ஹாரிஸ். ஜோ பைடனின் மனநிலை குறித்து கமலா ஹாரிஸ் துணிச்சலான பொய்களை கூறியுள்ளார். கமலாவை எப்போதும் நம்ப முடியாது. பைடனைப் போலவே அவரும் தலைமை தாங்க தகுதியற்றவர். ஒரே ஆண்டில் இந்த நாட்டை அழித்துவிடுவார். கமலாவுக்கு நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் அடுத்த நான்கு ஆண்டுகள் நேர்மையின்மை, திறமையின்மை, பலவீனம் மற்றும் தோல்விக்கான வாக்குகளாக மாறும்” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

வடகரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், 100 நிமிடங்களில் 45 முறை கமலா ஹாரிஸின் பெயரை உச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சமஸ்கிருதத்தில் பகவத்கீதை வாசித்த மாணவர்|மைக்கை பிடுங்கிய பள்ளிமுதல்வர்.. ம.பியில் வெடித்த போராட்டம்