உலகம்

’’மியான்மரில் போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூர்க்கத்தனமானது’’ - ஜோ பைடன்

Sinekadhara

மியான்மரில் போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூர்க்கத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களில் கிட்டத்தட்ட 7 குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமையன்று கொல்லப்பட்டது குறித்து பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ம் தேதி, மியான்மரின் இராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கியெறிந்து, ஒரு வருட கால அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தது. அதே போல நாட்டின் ஆலோசகர் ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சிறைப்படுத்தி வைத்தது. இந்த ஆட்சி கவிழ்ப்பு காரணமாக தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராணுவத்தால் கொலைசெய்யப்பட்டனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘’எனக்கு கிடைத்த தகவலின்படி, இது முழுவதும் மூர்க்கத்தனமானது. தேவையில்லாமல் நிறைய பொதுமக்கள் கொலைசெய்யப்படுவது மோசமான ஒன்று’’ என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியம், ’’இந்த கொடிய வன்முறை ஏற்கத்தக்கதல்ல’’ என்று கூறியுள்ளது. மேலும், ’’கொண்டாட்டத்திற்கு பதிலாக இந்த நாளை மியான்மர் ராணுவம் கொடூரமாகவும், வெட்கத்திற்குரிய நாளாகவும் மாற்றியுள்ளது’’ என்று கூறியுள்ளது.

உலகநாடுகள் பலரும் மியான்மர் ராணுவத்தின் இந்த செயல்குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.