ஜோ பைடன், மோடி ட்விட்டர்
உலகம்

ஜி20 மாநாடு: பிரதமர் மோடியிடம் பேசியது என்ன.. அமெரிக்க அதிபர் விளக்கம்!

Prakash J

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகிலிருந்து பல தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இதில் கலந்துகொண்டார். பின்னர், இந்த நிகழ்வை முடித்துக்கொண்டு அவர் வியட்நாம் புறப்பட்டார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா வந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம். எப்போதும்போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான இந்தியாவை கட்டியெழுப்புவதில் பொதுமக்கள் மற்றும் சுதந்திரமான ஊடகங்களுக்கு உள்ள முக்கிய பங்கு பற்றியும் நான் மோடியிடம் எடுத்துக் கூறினேன்.

ஜோ பைடன், மோடி

உலகெங்கிலும் உள்ள மக்கள் சந்திக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான உலகின் தலைமையை உணர்த்துவதற்கும், எங்களின் அர்ப்பணிப்பை நிரூபிப்பதற்கும் அமெரிக்காவுக்கு இது மிகவும் முக்கியமான தருணம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நீடித்த முன்னேற்றத்தில் முதலீடு செய்தல், காலநிலை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்ளுதல், உணவு பாதுகாப்பினை வலுப்படுத்துதல், கல்வி மற்றும் உலகளாவிய சுகாதரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.

இத்துடன் உச்சி மாநாட்டில் சட்டவிரோதமான உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான தேவை குறித்த குறிப்பிடத்தக்க உடன்பாடு இருந்தது. வியாட்நாம் மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவுகளைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம். சீனாவுடன் பனிப்போரை தொடங்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன், மோடி

முன்னதாக, கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடியின் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிட்டப்பட்ட கூட்டறிக்கையில், “சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், பன்முகத்தன்மை மற்றும் அனைத்து குடிமக்களுக்குமான சமமான வாய்ப்புகள் போன்ற முக்கியமான காரணிகளே இருநாட்டின் உறவுகளை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன” என்று இரு தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர்.