Yasuo Takamatsu pt web
உலகம்

டைட்டானிக்கை மிஞ்சும் காதல் காவியம்! சுனாமி விழுங்கிய மனைவி.. 13 வருடங்களாக கடலுக்குள் தேடும் கணவர்!

Angeshwar G

18ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சோகம்

ஜப்பான் மக்களிடம் உங்களது வாழ்வில் மிக மோசமான நாள் எது என கேட்டால், நிச்சயமாக 2011 ஆம் ஆண்டில் மார்ச் 11 ஆம் தேதியைச் சொல்வார்கள். தோஹோகு நிலநடுக்கம் ஏற்படுத்திய சுனாமி, கிட்டத்தட்ட 40 மீட்டர் உயரத்திற்கு அலைகளை ஏற்படுத்தியது. 40 மீட்டர் என்றால் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது தானே. கிட்டத்தட்ட 132 அடி உயரம்..

இந்த சுனாமியின் விளைவாக 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடற்றவர்களாக மாறினர். 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நாட்டின் உள்கட்டமைப்பைக் கடுமையாக சேதப்படுத்தியது இந்த சுனாமி. 2500 பேரை காணவில்லை, அவர்களது உயிர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கப்பட்டது.

மனைவியை கடலுக்குள் தேடும் கணவர்

இப்படிக் காணமல்போனவர்களில் ஒருவர்தான் யூகோ என்ற பெண். ஜப்பானைச் சேர்ந்த யசுவோ தகமாட்சு என்பவரது மனைவி. இருவரும் 1988 ஆம் ஆண்டு சந்தித்துக் கொண்டவர்கள். அப்போது யூகோவிற்கு வயது 25. தகமாட்சு ஜப்பானின் தரை தற்காப்புப் படையில் சிப்பாயாக இருந்தவர். யூகோ க்ளாசிக்கல் இசையைக் கேட்பதில் விருப்பம் கொண்டவர். ஓவியம் வரைவதிலும் திறமை கொண்டவர். ஆனால், தனது திறமைகளை தனது கணவருக்கு தவிர யாருக்கும் காட்டவில்லை. ஆனால், சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பல்லாயிரக் கணக்கான பேர்களில் யூகோவும் ஒருவர். சுனாமி ஏற்பட்டபோது தகமாட்சு தான் வேலை செய்யும் இடத்தில் இருந்தார்.

கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியில், மனைவியின் உடல் கிடைக்கவில்லை என்றாலும், தனது மனைவிக்கு முறையாக இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடலுக்குள் தேடி வருகிறார் தகமாட்சு. முதல் இரண்டு நாட்கள் அவர் கடற்கரை, காடுகள், மலைப்பகுதிகளில் மனைவியின் உடலைத் தேடினார். அடுத்த வாய்ப்பாக அவருக்கு இருந்தது கடல் மட்டுமே..

ஒருநாள், இரண்டு நாளாக அல்ல. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வாரத்திற்கொருமுறை கடலுக்குள் தேடி வருகிறார், தகமாட்சு. இதற்காக எப்படி டைவ் செய்ய வேண்டும் என்று தகாஹாசி என்பவரது உதவியுடன் கற்றுக்கொண்டார். தகாஹாஷி சுனாமியால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்தவர் மற்றும் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேடினார்.. தேடுகிறார்.. தேடுவார்..

கடலின் ஆழத்தில் அதிலும் சுனாமியின் ஆழத்தில் காணாமல் போன ஒருவரது உடலை தேடி எடுப்பது என்பது அத்தனை சுலபமான காரியமா? பலரும் அவரை தடுத்தனர்.. வேண்டாம் என்றனர்.. ஆனால், வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு கிடப்பதா காதல்? தேடினார்.. தேடுகிறார்.. தேடுவார்..

2013 முதல் தற்போதுவரை கடலுக்குள் டைவ் செய்து தனது மனைவியின் உடலைக் கண்டெடுக்க முயற்சிக்கிறார். தனது மனைவியின் மீது இருக்கும் அழியாத அன்பின் காரணமாக அவரை ஒருநாள் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.

கடலுக்குள் அவருடன் நெருக்கமாக உணர்கிறேன்

இதுதொடர்பாக பேசும் தகமாட்சுவோ, 56 வயதில் நான் டைவ் செய்ய கற்றுக் கொள்வதற்கு காரணம், என் மனைவியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் என்கிறார். இது கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்.. ஆனால் என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம், அவரைத் தேடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கடலில் அவளுடன் நெருக்கமாக உணர்கிறேன் என தெரிவிக்கிறார். சுனாமி ஏற்பட்டு பல மாதங்களுக்குப் பின், தனது மனைவி வேலை செய்த பணியிடத்தில் அவரது செல்போனைக் கண்டெடுத்தார் என்பதையும் குறிப்பிடத்தக்கது.. இவரது வாழ்க்கைக் கதையை ஒட்டி பல்வேறு குறும்படங்களும் இயக்கப்பட்டுள்ளன.