Iwao Hakamada pt web
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 46 ஆண்டுகள் சிறைவாசம்... மரண தண்டனையை வென்ற முதியவரின் கதை...

Angeshwar G

மிருகத்தனமான விசாரணையில் கட்டாயமாக ஒப்புக்கொண்டார்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்., ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று சொல்வார்கள். ஒரு நிரபராதி தவறாக தண்டிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த நீதித்துறையும் கேள்விக்குள்ளாகும். அதே நிரபராதிக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டு அதை எதிர்நோக்கியே 46 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தால்? நினைக்கவே பதறுகிறதுதானே? சம்பவம் நிகழ்ந்துள்ளது.. நம் ஊரில் அல்ல.. ஜப்பானில்.

ஜப்பானில் 1968-ஆம் ஆண்டு, தவறான குற்றச்சாட்டின் கீழ் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நிரபராதி என்பது தெரியவந்துள்ளது.

1966-ஆம் ஆண்டில், நிறுவனமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மூவர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கிலும், அவர்களது வீட்டிற்கு தீவைத்த வழக்கிலும் இவாவோ ஹகமடா என்பவர் குற்றம்சாட்டப்பட்டார். மேலும், முதலாளியின் வீட்டில் இருந்து 20 ஆயிரம் யென் பணத்தை கொள்ளையடித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தான் குற்றவாளி அல்ல என்று முதலில் மறுத்த ஹகமடா, நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் நீடித்த காவல்துறையின் மிருகத்தனமான விசாரணையில், கட்டாயமாகத் தான் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொய்க் குற்றச்சாட்டு

இந்த வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 1968-ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நீதி விசாரணை, மேல்முறையீடு, மறுவிசாரணை போன்ற செயல்முறைகள் காரணமாக அவர் தூக்கிலிடப்படவில்லை என்பது நற்செய்தி. விசாராணை பல ஆண்டுகள் நீடித்தது. இரத்தக்கறை படிந்த ஆடைகள்தான் அவர்மீது குற்றம்சுமத்தப் பயன்பட்டது. ஆனால், அந்த ஆடைகளில் இருந்து மீட்கப்பட்ட டிஎன்ஏ ஹகமடாவின் டிஎன்ஏ உடன் பொருந்தவில்லை என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தற்போது 88 வயதாகும் ஹகமடா கடந்த 2014-ஆம் ஆண்டு, அவரது வழக்கறிஞர்களின் நியாயமான வாதத்தாலும், ஹகமடாவின் வயது காரணமாகவும், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், மறுவிசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. இதன்காரணமாக, ஹகமடா வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக விசாரணை நடந்துவந்தது.

மறுவிசாரணைக்கு ஹகமடா ஆஜராகவில்லை என்றாலும் கூட, அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோ தனது சகோதரனுக்காக நீண்ட போராட்டத்தை நடத்தினார்.

மரணதண்டனையை எதிர்நோக்கி அதிக காலம் சிறை

தற்போது அவர், குற்றவாளி அல்ல என ஷிசுவோகா மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி கோஷி குனி, இந்த வழக்கில் பல பொய்யான தகவல்களை நீதிமன்றம் ஒப்புக்கொண்டதாகவும், ஹகமடா குற்றவாளி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், வழக்கை விசாரித்த அதிகாரிகளால் சாட்சிகள் புனையப்பட்டுள்ளன என்றும் ஹகமடா குற்றவாளி இல்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.

தொழில்முறை குத்துச்சண்டை வீரராக இருந்த ஹகமடா 46 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். மரண தண்டனையை எதிர்நோக்கி அதிககாலம் சிறையில் கழித்த நபராக ஹகமடா அறியப்படுகிறார்.

ஹகமடா விடுவிக்கப்பட்டதன் மூலம், போருக்குப் பிந்தைய ஜப்பானின் குற்றவியல் நீதித்துறை வரலாற்றில், மறுவிசாரணையில் குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்ட ஐந்தாவது நபராக ஹகமடா உள்ளார். இந்த வழக்கு மரண தண்டனையை ரத்து செய்வது பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. ஏனெனில் 2019 ஆம் ஆண்டு அரசாங்க கணக்கெடுப்பில், ஒட்டுமொத்த ஜப்பானிய மக்களில் 9%பேர் மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவாக இருந்துள்ளனர்.