உலகம்

“ஆறு மணிநேரம் தூங்கினால் 42 ஆயிரம் பரிசு” - அதிரடி ஆஃபர்

webteam

வாரத்திற்கு 5 நாட்கள் இரவில் குறைந்தது 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42ஆயிரம் வரையிலான ஊக்கப்பரிசு வழங்கப்படும் என ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷ்னல் என்ற திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனம் இந்த அதிரடி ஆபரை அறிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 5 நாட்களின் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு நம்முடைய தூங்கும் நேரத்தை அது கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளி வழங்கப்படும். புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனத்துக்கு சொந்தமான உணவகத்தில் ஆண்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் வரையிலும் உணவு உட்கொள்ளலாம் என்றும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய கிரேசி இண்டெர்நேஷ்னல் நிறுவனத்தினர் ''சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி ஆண்கள், பெண்கள் என 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் 92 சதவீதம் பேர் இரவு சரியாக தூங்குவதில்லை. அதிகமானோர் செல்போனில் மூழ்கி தூக்கத்தை இழப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சரியாக தூங்காத ஊழியர்களால் அலுவலக வேலைகள், தொழிற்சாலை தயாரிப்புகள் பாதிப்படுகிறது. அதனால் தூக்கத்தின் தேவையை உணர்த்த இது மாதிரியான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் சரியாக தூங்காத ஊழியர்களினால் வருடத்திற்கு கோடி கணக்கில் வியபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கின்றன'' என்று தெரிவித்துள்ளது. ஊக்கத்தொகை மட்டுமல்லாது சரியான உணவு, உடற்பயிற்சி, சுற்றுலா என சில செயல்பாடுகளும் ஊழியர்களின் நலனுக்காக மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தூக்கமின்மை என்பது ஜப்பான், அமெரிக்க நாடுகளை மட்டுமில்லாமல் இந்தியாவிலும் அதிகம் பரவி வருகிறது. புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் 6.5 மணி நேரம் என்பதே சராசரி தூக்கமாக உள்ளது. இளைஞர்கள் அதிகளவில் தூக்கத்தை இழக்கின்றனர். செல்போன், கேம், டிவி, கம்யூட்டர் போன்ற காரணங்களால் தான் இளைஞர்கள் தூக்கத்தை தொலைக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.  சரியான உறக்கமே உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்யமான ஒன்று என்பதை அனைவரும் புரிந்து  செயல்பட வேண்டுமென்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ளது.