உலகம்

ஆப்கான் விவகாரம் - இந்தியர்களுக்கு அவசர கால தொலைபேசி எண்கள் வெளியீடு

PT WEB

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அங்கிருந்த நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களின் கவலையை புரிந்துகொள்வதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியர்களுக்கான அவசரகால தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

காபூலில் இந்தியர்கள் ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறைத் அமைச்சர் ஜெய்சங்கர், விமான நிலையம் தொடர்பான செயல்பாடுகள் பெரும் சவாலாக இருப்பதாகவும், இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஆப்கான் நிலவரம் குறித்து விவாதித்ததாக அவர் தெரிவித்தார். காபூல் விமான நிலைய செயல்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் முயற்சிகளை பாராட்டுகிறேன் என்றார்.

இதற்கிடையே, ஆப்கானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்தல்களை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவசர கால தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆப்கானில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்கள் அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதன்படி இந்தியர்களுக்கு உதவிமைய எண்: +919717785379 அறிவிக்கப்பட்டுள்ளது.